Posts

Showing posts from June, 2024

பாரியின் கதை

                               பாரியின் கதை (புறநானூற்றில் உள்ள சில பாடல்களைத் தழுவி எழுதப்பட்ட ஒரு சிறு நாடகம்)       முனைவர் இர. பிரபாகரன் மேரிலாந்து, அமெரிக்கா       பாரியின் கதை காட்சி - 1     இடம்: பறம்பு நாட்டில் உள்ள ஒரு காடு பங்கு பெறுபவர்கள்: கபிலர், ஒரு பாணன், ஒரு விறலி (பாணனின் மனைவி) தொடர்புடைய புறநானூற்றுப் பாடல்கள்: 105, 106   ------------------------------------------------   கபிலர்: நீங்கள் யார்? உங்களைப் பார்த்தால் மிகவும் களைப்பாக இருக்கிறீர்கள் போலிருக்கிறதே! பாணன்: ஐயா! வணக்கம்! இங்கே பாரின்னு ஒரு வள்ளல் இருக்காரு. அவரு கிட்டே போனா நிறையா பரிசு கொடுப்பாருன்னு கேள்விப் பட்டேமுங்க. அவரைப் பாக்கத்தான் போய்க்கிட்டு இருக்கேமுங்க. கபிலர்: உங்கள் கையிலே யாழ் இருக்கிறது; அவர் உங்கள் மனைவி என்று நினைக்கிறேன். அவர்களைப் பார்த்தால் ஒரு விறலி போல் தோன்றுகிறதே? பாணன்: ஐயா! நீங்க சரியா சொல்லிட்டிங்க! நான் பாணன் தானுங்க. இவ விறலிதானுங்க. கபிலர்: அப்படியென்றால் மிக நல்லது. நீங்கள் சரியான இடத்திற்குத் தான் வந்திருக்கிறீர்கள்.